உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - சஹ்ரானின் சகோதரி உட்பட 63 பேருக்கு விளக்க மறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு தின் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று (28) திகதி உத்தரவிட்டார்.
கடந்த 21.04.2019 அன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடியைச் சேர்ந்த 65 பேரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்து இரு வெவ்வேறு வழக்குகளைக் கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தற்போது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தளர்த்தப்படாத காரணத்தினால் நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாததன் காரணமாக அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.