கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி
மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
அத்தோடு, காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ வரும் வரை காத்திருக்காமல், அங்குலானை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாகத் தங்களின் படகுகளில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்த கடற்படை வீரர்களை மீட்டுள்ளனர்.

தகவல் அறிந்ததும் அங்குலானை காவல்துறையினர், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
காணாமல் போன மாலுமி
கடற்றொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பேராதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணியின் மூலம் படகில் இருந்த 12 மாலுமிகளில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போன ஒரு மாலுமியைத் தேடும் தீவிர நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் MI-17 உலங்குவானூர்தி மற்றும் பெல் 412 ரக விமானங்கள் மூலம் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |