பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்த மகிந்த - கோட்டாபய! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் பகீர் திருப்பம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், பிரான்சில் உள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அசாத் மௌலானாவிடம் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் கிடைத்துள்ள ஒரு முக்கிய திருப்பம் என்று தெரிவித்த அவர், தாக்குதல்களின் சூத்திரதாரியாக சுரேஷ் சலே செயல்பட்டுள்ளார் என்றும், ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்கை அடைவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் மௌலானா தெரிவித்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தக் கொலைகள் மற்றும் கடத்தல்கள்
மேலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்து, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் அவர் விடுவிக்கப்படுவார் எனக் கூறியதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பிறகு, புலனாய்வுத் தகவல்கள் மற்ற நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சலே, அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான சைனி உள்ளிட்டோருக்கு சுரேஷ் சலேயின் கோரிக்கையின் பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொதுப் பணத்திலிருந்து 250,000 ரூபாயையும், பிள்ளையான் 50,000 ரூபாயையும் பிணைப் பணமாக வழங்கியுள்ளனர் என்றும், தேர்தலுக்கு முன்னதாகத் தகவல்கள் கசிவதைத் தடுக்கவே தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் பொதுப் பணத்தில் பாதுகாக்கப்பட்டனர் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பிள்ளையானின் குழுவினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலரும் இணைந்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கீத் நொயார் மீதான தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் உள்ளிட்ட அரசியல் ஒப்பந்தக் கொலைகள் மற்றும் கடத்தல்களை நடத்தியுள்ளனர் என்றும், இக்குழுவின் 2,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு ஊடாகப் பொதுப் பணம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மௌலானாவின் குடும்பத்தினர்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், அசாத் மௌலானாவின் குடும்பத்தினரை சுரேஷ் சலே அஹுங்கல்லவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மாற்றி தூதரக வேலை வாய்ப்பு தருவதாக உறுதியளித்ததற்கான ஹோட்டல் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மறுபுறம், சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ இக்குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தி நிராகரிக்காத வரை அதனை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என அவர் வாதிட்டுள்ளார்.
அனைத்துத் தரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதவான் பசந்த அமரசேன, சுரேஷ் சலேயின் நீதிமன்ற முன்னிலைப்படுத்தல் மற்றும் 127 வது பிரிவின் கீழ் அவர் வாக்குமூலம் அளிப்பதற்கான கோரிக்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் மீதான தீர்ப்புகளை ஜூலை 1 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதுவரை சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.