தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது அரசாங்கம் - பகிரங்க குற்றச்சாட்டு
உயிர்த்தஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியாக நௌபர் மௌலவியை அறிவிப்பதன் பின்னணியின் ஊடாக தனது இயலாமையை மறைத்துக்கொள்ள அரசாங்கம் முற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் அந்தக்கட்சியின் வஜிர அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரு வருடங்களாகின்றன. ஆனால் போலிக்காரணங்களை கூறி உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்காத நௌபர் மௌலவி சஹ்ரானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அவரிடமிருந்து விலகியவராவார். தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் எமது அரசாங்கத்தினால் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது இந்த தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இவரையே பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளது. அவ்வாறெனில் ஏன் இவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவில்லை? இதில் யாருடைய அழுத்தம் தாக்கம் செலுத்துகிறது? நௌபர் மௌலவியை கைது செய்வதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் அரசாங்கம் நிச்சயம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.