வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்!
இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற நிலையில், தற்போது அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள 8 முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தேக நபர்களைக் குறித்த நாடுகளிலிருந்து விரைவில் இலங்கைக்கு நாடுகடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான நடைமுறைகளை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
இதேவேளை, சர்வதேசக் காவல்துறையின் "சிவப்பு நோட்டீஸ்" பிறப்பிக்கப்படாத போதிலும், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் மேலும் 15 சந்தேக நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
32 முக்கிய குற்றவாளிகள்
இலங்கை காவல்துறை எடுத்து வரும் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பலனாக, 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த 32 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சர்வதேச சிவப்பு நோட்டீஸ் மூலம் வெற்றிகரமாக இலங்கைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என காவல்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |