மின் கட்டணம் அதிகரிப்பு - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு
அரசின் தன்னிச்சையான மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு . 'பொதுக் கொள்கை திட்டங்களின்' கீழ் யோசனையை முன்வைக்க அமைச்சரவை தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சார சபையிடமிருந்து வரவேண்டும் யோசனை
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் முறைமை சட்டத்தில் தனித்தனியாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சார சபையிடமிருந்து கிடைக்கப் பெற்றால் மாத்திரமே நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
தற்போதைக்கு வாய்ப்பில்லை
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாளையதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றார்.
