உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு இருந்தது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சிறுமிகளைத் தகாத தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 2019 ஆம் ஆண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
எப்ஸ்டீன் கோப்புகள்
இதையடுத்து, அவர் சிறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டாலும், ஒருபுறம் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்தநிலையில், உலக நாடுகளின் அதிகார மையங்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது குறித்த எப்ஸ்டீன் ஆவணங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆவணங்கள், காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பொதுவெளியில் விடப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி
வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, டொனால்ட் ட்ரம்ப் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ட்ரம்ப் மீது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் 13 வயது சிறுமியைத் தகாத முறைக்கு உள்ளாக்க முயன்றதாக ஒரு வாக்குமூலம் பதிவாகியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்தோடு, மாரலாகோவில் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக நடத்தப்பட்ட விருந்தில் ட்ரம்ப் கலந்துகொண்டதாகவும், அங்கு அவர் சிறுமிகளைத் தகாத முறையில் மதிப்பிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எஃப்பிஐ (FBI) விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த ஆவணங்களில் ட்ரம்ப்பின் பெயர் 3,000 இற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தலைமைகள்
இதையடுத்து, இந்தியத் தரப்பைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரின் பெயர்கள் எப்ஸ்டீனின் மின்னஞ்சல் தொடர்புகளில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி அமெரிக்கா சென்று ட்ரம்ப்பைச் சந்தித்த நிலையில், அதற்கு முன்னதாக மார்ச் மாதம் அனில் அம்பானி எப்ஸ்டீனுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதில், ட்ரம்ப் - மோடி சந்திப்பிற்கு உதவுமாறு அனில் அம்பானி கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், ஜூலை 2017 இல் மோடி இஸ்ரேல் சென்றிருந்த சமயத்தில், அவர் ட்ரம்பின் நலனுக்காகச் செயல்பட்டதாக எப்ஸ்டீன் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, 2014 ஆம் ஆண்டு ஹர்தீப் சிங் புரி, எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள்
இவர்கள் தவிர, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோரைப் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்களும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பிற்கு எப்ஸ்டீனிடம் மருந்து கேட்டதாகவும், ஜார்ஜ் புஷ் சிறுவன் ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதிர்ச்சியூட்டும் புகார்கள் இதில் இடம்பெற்றிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எப்ஸ்டீன் சிறையில் உயிரிழந்த பிறகு, அவர் பல முக்கிய நபர்களின் ரகசியங்களை அறிந்திருந்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வந்த சூழலில், தற்போது வெளியாகியுள்ள இந்த 35 லட்சம் பக்க ஆவணங்கள் உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஆவணங்களில் உள்ள அனைத்தும் எப்ஸ்டீனின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் என்பதால், இவற்றின் சட்டப்பூர்வ உண்மைத்தன்மை குறித்த விவாதங்களும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 2 மணி நேரம் முன்