ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைகளில் இலங்கைக்கு இழப்பு ஏற்படும் ஆபத்து?
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைகளில் இலங்கையின் ஆடை தொழிற்துறைக்கு அனுமதி இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கள் கிழமை முதல் ஆரம்பமான மனித உரிமைகள் மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகளுடன் இலங்கையின் ஆடை தொழிற்துறைக்கு தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளின் சந்தை வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்ற நிச்சமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாத நடுப் பகுதியில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கு வழங்கப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தை வாய்ப்பை இரத்துச் செய்வது குறித்து ஆராயுமாறு நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனை முன்வைத்தது.
இதனடிப்படையில், இந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, அரசாங்க, நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளை சந்திக்க உள்ளது. இந்த குழுவினர் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு முதல் 7 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலங்கை 2.7 பில்லியன் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்தது. அது இலங்கையின் முழு ஆடை ஏற்றுமதியின் 45 வீத பெறுமதியாகும். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகை மூலம் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் காரணமாக இலங்கை 60 வீத பிரதிபலன்களை பெறுகிறது.
ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையை தக்கவைப்பதற்காக இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்துள்ளதுதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதி துறையினரின் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரிச் சலுகையை இரத்துச் செய்தால், 600 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் என ஆடை உற்பத்தியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.