செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (01) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி
ஜனாதிபதியாக அநுர பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாண விஜயத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின் போது செம்மணிக்கு வருகை தருவது குறித்து நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் நேற்று (31) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
