முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்
முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டு குளத்தின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப் படையினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் “முத்துஐயன்கட்டு அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி வருகிறது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானதெனவும், முத்துஐயன்கட்டு குளத்துக்கு எந்தவித சேதமும் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்த அளவிலான பராமரிப்பு
தற்போது நடைபெற்று வருவது முத்தையன்கட்டு குளத்தின் வால்கட்டு பகுதியில் குறைந்த அளவிலான பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் மட்டுமே என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாகாமல், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பாமல் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்பட்டால், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அதிகாரப்பூர்வமாக உடனடியாக தகவல் வழங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |