ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பில் வெளியான தகவல்
ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுக்களை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை முற்றாக மறுத்துள்ளது.
ஒரு அறிக்கையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட பல சமூக ஊடகப் பதிவுகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL1213 இன்றையதினம்(09) திங்கட்கிழமை Rome நோக்கி புறப்பட்டது.
மத்திய கிழக்கு பதற்றம்
இந்த விமானம், ஏற்கனவே ஐரோப்பா மற்றும் பிற இடங்களுக்கு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வசதி செய்வதற்கும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கைப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு திரும்ப உதவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள சூழ்நிலையால் பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, அரசின் முழுமையான தலையீட்டுடன் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விமானம் ஒரு அமைச்சரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களையும் அதிகார சபை மறுத்துள்ளது. அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்ட அமைச்சர் சில நாட்களுக்கு முன்பே நாட்டிற்கு திரும்பியிருந்தார் என்றும் கூறப்பட்டது.
இத்தகைய தவறான தகவல்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |