யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து கண்ணாடி இழைப்படகில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இளம் குடும்பஸதர் ஒருவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்ற 34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மனைவியை பார்க்க பயணம்
கடந்த 06 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றதாக தெரியவருகிறது. இவர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள மனைவியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் மறைந்திருப்பதாக இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி க்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (08)அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த ஒருவரைக் கைது செய்து சோதனையிட்டபோது, அவரிடம் இலங்கைப் பணம், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இலங்கை அரச அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது.
மண்டபம் அகதிகள் முகாமிற்குச் செல்வதற்காக இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் காத்திருந்தபோதே, அவர் கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட அவரை இராமேஸ்வரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்த கியூ பிரிவு காவல்துறையினர், அவர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட கண்ணனுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டு, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |