விவசாயிகளின் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற கனடா அரசியல்வாதியால் எழுந்த சர்ச்சை!
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கனடா அரசியல்வாதி பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரிலே கனடாவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டன. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிற அரசியல்வாதிகள், இந்தியாவில் விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கனடாவிற்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் ராமன்தீப் பிரர், விவசாயிகள் போராடி வரும் ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள குண்ட்லி பகுதிக்கு நேரில் சென்று விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சை கிளப்பியுள்ளது. சீக்கியரான ரமன்தீப் பிரர், 2019 கனடா மத்திய தேர்தலில் பிராம்ப்டன் தெற்கு தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.
பிரார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரிடம் தேர்தலில் தோற்றார்.
ராமன்தீப் பிரர் ஜனவரி 2 ஆம் தேதி குண்ட்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்தித்த போது எடுத்து புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். பிரார் இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருப்பவர். OCI அட்டை வைத்திருப்பவர் இந்தியாவில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் தான் கலந்து கொண்டதாக ராமன்தீப் பிரார் ஒப்புக் கொண்டார். இருப்பினும், நெறிமுறை மீறப்பட்டதை அவர் மறுத்தார்.
போராட்டங்கள் விவசாயிகளின் விஷயம் மட்டுமல்ல. நான் விவசாய பின்னணியில் இருந்து வந்தவன், இந்த சட்டங்கள் நம்மை நேரடியாக பாதிக்கின்றன என பிரார் கூறினார். OCI அட்டைதாரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து தனக்குத் தெரியாது. விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் இயல்புடையவை அல்ல. நாங்கள் எங்கள் நிலங்களுக்காக போராடுகிறோம், இது ஒரு அரசியல் சண்டை அல்ல. தனக்கு இந்தியாவில் உறவினர்கள் இருந்ததாகவும், இந்தியாவில் நிலம் வைத்திருப்பதாகவும் பிரார் கூறினார்.
அரசாங்கம் அல்லது கார்ப்பரேட்டுகள் நிலங்களை கையகப்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறிப்பிட்ட பிரார், வேளாண் சட்டங்கள் எங்கள் மீது நேரடித் தாக்குதல் என்று கூறினார்.