இரசாயன உரம் இல்லை -விவசாயிகள் எடுத்த அதிரடி முடிவு
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முறையற்ற பசளை விநியோகம் மற்றும் கரிமப்பசளை திட்டம் காரணமாக தென்னிலங்கையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளிலிருந்து விலகிவருகின்றனர்.
தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹெர பகுதியில் உள்ள விவசாயிகள், பெரும்போக நெல் விவசாயத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
சுமார் 950 ஏக்கர் வயல் நிலங்களில் இருந்து 400 விவசாயிகள், நெல் விளைச்சலுக்கு தேவையான பசளை இல்லாமல் பயிர்கள் யாவும் அழிவடைந்துள்ள நிலையில், இனியும் அரசாங்கத்தை நம்ப முடியாதென கூறி விலகியுள்ளதாக லுனுகம்வெஹெர விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.ஏ.எஸ்.வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதுசார்ந்து நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சி அலுவலர் மட்டுமே இருந்ததால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும், ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின்படி இரசாயன உரங்கள் மற்றும் விவசாய சலுகை பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அம்பாந்தோட்டை மாத்திரமன்றி குருநாகல் உட்பட தென்னிலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கையை தற்காலிகமாகக் கைவிடவும் தீர்மானித்துள்ளனர்.