தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்! 13 வயது மகள் உள்ளிட்ட மூவர் பலி
புதிய இணைப்பு
அனுராதபுரத்தின் கலேன்பிடுனுவெவ பகுதியில் நடந்த தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இன்று (06) அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்த பெண்ணின் கணவர், தனது வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதன்போது, தீ விபத்துக்கு காரணமான நபரின் 36 வயதுடைய மனைவியே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தீயை வைத்த 43 வயதுடைய தந்தை மற்றும் அவரது 13 வயது மகளும் முன்னதாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் பெற்றோல் ஊற்றி தனது வீட்டை தீ வைத்ததுடன், தீயில் சிக்கி அந்த நபரும் அவரது மகளும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவரால் இந்தத் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தீயினால், தீயை வைத்த 43 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை வீட்டுக்கு தீ வைக்கும் சந்தர்ப்பத்தில் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அறிந்ததும் மகன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகனும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், அவர்களுக்கு இடையில் இருந்த தகராறு காரணமாக பல சந்தர்ப்பங்களில் கலென்பிந்துனுவெவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |