கபில சந்திரசேன கொலை விசாரணையில் உள்நுளையும் FBI
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியைத் திறந்து, அதிலுள்ள விபரங்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான பெடரல் விசாரணைப் பணியகத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவால் நேற்று (26.05.2026) கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்.பி.ஐ அமைப்புக்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய, அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைகளைத் தொடர்ந்து கைபேசி தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மரண பரிசோதனை
கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை மற்றும் மரண பரிசோதனை சாட்சிப்பதிவுகள் ஐந்தாவது நாளாகவும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மரண பரிசோதனைக்கான சாட்சியங்களை வழங்குவதற்காக இரு சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக சாட்சியங்களைப்பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அவர்கள் இருவரும் தத்தமது நீதிமன்றப் பணிகள் காரணமாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கச் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், அடுத்த சாட்சிப்பதிவு தினத்தில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்டு, 19 மற்றும் 20ஆம் இலக்க சாட்சிகளான அவ்விருவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்பாணைகளை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இரு சட்டத்தரணிகளுக்கும் அழைப்பாணை
இதன்போது குறுக்கிட்ட நீதிவான், இந்த மரண விசாரணையில் இதுவரை 18 சாட்சிகளிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ அழைப்பாணைகளும் இன்றி, காவல்துறையின் அறிவித்தலுக்கு அமைவாகவே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறிருக்கையில், 19 மற்றும் 20ஆம் இலக்க சாட்சிகளுக்கு மாத்திரம் அழைப்பாணைகளை கோருவது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், தமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டால் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கத் தயாராக உள்ளதாக அச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிவான், முந்தைய 18 சாட்சிகளைப் போன்றே இவர்களுக்கும் அதே நடைமுறையைப் பின்பற்றிச் சாட்சியமளிக்க அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், இரு சட்டத்தரணிகளுக்கும் அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.
இதன்படி விசாரணையின் போது, கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காகப் பிணையாளியாக முன்னின்றிருந்த இந்திக ரத்நாயக்க என்பவரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |