நாசகாரச் செயல்...! நெற்பயிர்கள் மீது தெளிக்கப்பட்ட விஷம்
அறுவடைக்குத் தயாராக இருந்த ஐந்து ஏக்கர் நெற்பயிர்கள் மீது இனம்தெரியாதோரால் "ரவுண்டப்" களைகொல்லி விஷம் தெளிக்கப்பட்ட நாசகாரச் செயல் ஒன்று அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் காவல் நிலையத்திலும் விவசாயத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயி கருத்துத் தெரிவிக்கையில், "தம்பலகாமம் ஆதி கோணநாயகர் தேவஸ்தானத்திற்குரிய இந்த வயல், கடந்த காலங்களில் கோவிலுக்குத் தொண்டாற்றும் அடியார்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ஏற்பட்ட பெரும் நட்டம்
நான் இம்முறை சிறுபோகத்திற்காக இதைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நெற்செய்கையில் ஈடுபட்டேன்.
தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து, கதிர் வந்து அறுவடையை எதிர்பார்த்திருந்தேன். இந்த நிலையில், எனது உழைப்பை அழிக்கும் கொடூர நோக்குடன் இனம்தெரியாத நபர்கள் வயல் வரம்பு நீட்டுக்கும் விஷத்தைத் தெளித்துள்ளனர்.
இதனால் கதிர்கள் கருகி, எனது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது எனத் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட பெரும் நட்டம் குறித்து கந்தளாய் காவல் நிலையத்திலும், விவசாய அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
