எமது மீனவர்களை பாதிக்கும் செயற்பாடு -அமைச்சர் டக்ளஸிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவருக்கு அனுமதி வழங்கும் செயற்பாடு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுதரம் சிந்திப்பது நல்லவிடயம். அந்த விடயத்தில் அவர் அக்கறை கொண்டுள்ளதால் அந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துவார் என்று நம்பவில்லை.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்தியமீனவர் விடயத்தில் கட்டணம் அறவிட்டு,அதனை எமது மீனவர்களுக்கு வழங்கலாம் என்று கடற்றொழில் அமைச்சர் சொல்லியிருக்கின்றார். அது எமது மீனவர்களை பாதிக்கும் ஒரு விடயமே. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கின்றது.
எனினும் அதனை ஒரு சிந்தனையாக சொல்லியிருப்பதாகவும் திட்டமாகசொல்லவில்லை என்று கடற்தொழில் அமைச்சர் கூறியிருக்கின்றார். குறிப்பாக மீன்பிடிதொழிலில் ஈடுபடும் இந்திய முதலாளிகள் எவ்வளவு பணத்தை வழங்கியும் அந்த அனுமதியினை பெறுவார்கள். இதனால் ஏழை கடற்தொழிலாளர்கள் நன்மையடையமாட்டார்கள்.
வாழ்வாதாரம் என்பது தொப்புள்கொடி மற்றும் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது.இந்தியாவை பொறுத்தவரை கடற்தொழிலில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெரிய முதலாளிகளின் கீழே வேலை செய்யும் தொழிலாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு அந்த தொழிலே மூலாதாரமாகவுள்ளது.
யாராக இருந்தாலும் தமது வாழ்வாதாரத்தினை பார்க்கவே முயற்சிசெய்வர். எனவே அந்தவிடயத்தினை விரைவில் பேசித்தீர்ப்பதன் மூலம் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்.
தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்சியாக நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். இந்த அரசில் அந்த அழுத்தங்கள் கூடுவதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம் இருக்கின்றது.
சிங்களமக்களின் வாக்குகளை பெறுவதற்காக அப்படி செய்யப்படுகின்றது. பெரும்பான்மை சிங்களமக்கள் அப்படியான மனப்போக்கில் இருப்பவர்கள்அல்ல, எனினும் அரசியல்வாதிகள் தூண்டும் போது அதனை அவர்கள் கடைப்பிடித்து வாக்களிப்பார்கள். கடந்த காலங்களில் சிங்கள கடும்போக்காளர்களாக இருந்த பலர் அரசியலில் படுதோல்வியடைந்திருக்கின்றார்கள்.
எனவே இந்த அரசு இதனையே நம்பியிருந்தால் பெரும் பின்னடைவு மிகவிரைவில் வரும். அரசுக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும், உடனடியாக அரசாங்கத்தில் மாற்றம் ஏற்ப்படும் என்று நான் நம்பவில்லை. அதில் ஒரு பலவீனமான நிலையை ஏற்ப்படுத்தலாமே தவிர,அரசை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிகட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை.எனினும் ஒரு பலவீனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.
மாகாணசபை தேர்தலில் தொகுதிக்கு மூன்று பேரை நியமிப்பது என்ற பெரமுனவின் யோசனை நாட்டின் எந்தப்பகுதிக்கும் சாத்தியமில்லாத ஒன்று. அது குழப்புகின்ற ஒரு விடயம். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரை நிறுத்திவிட்டு அவற்றை தாம் வென்றெடுக்கலாம் என்று பசில்ராஜபக்ச எண்ணியிருக்கலாம். அதற்காக இப்படி ஒரு திட்டத்தினை வைத்திருக்கலாம். இது ஜனநாயகத்தையும், அரசியல்கட்சிகளையும் கேலிக்கிடமாக்கும் விடயமாகவே நான் பார்க்கின்றேன் என்றார்.