திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி: ஆர்ப்பாட்டத்தில் குதித்த கடற்றொழிலாளர்கள்
சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக திருகோணமலை சிறிமாபுர கடற்றொழிலாளர்கள் ஜமாலியா பகுதியில் திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தம்

குறித்த பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி வருவதாகவும் இதனால் சிறிமாபுர பகுதியில் வசித்துவரும் சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த திருகோணமலை தலைமையக காவல்துறை பொறுப்பதிகாரி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இவ் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.