சிறுமியின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா தாள் -வெளிச்சத்துக்கு வரும் மேலதிக தகவல்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமி உயிரிழக்கக் காரணமான பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் 19 வயதான வேலைக்கார இளைஞன் குறித்த சிறுமியைத் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
சிறுமியின் அறையில் 5 ஆயிரம் ரூபா தாள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்ட பின் இத்தாக்குதல் நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.
குறித்த வேலைக்காரனால் தாக்கப்பட்டதால் பயந்து சிறுமி தனது தாயாரை அழைத்து தான் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பொரளைப் பொலிஸாரும் குறித்த பணியாளரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். இதேவேளை தான் தற்கொலை செய்வதற்காக தீ வைத்துக்கொண்டதாக சிறுமி கூறியதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்ற படுக்கையில் வைத்தியரால் எழுதப்பட்டுள்ளது.
இது ஒரு தற்கொலை என ஆரம்ப பரிசோதனையின் போது அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பரிசோதகர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஒன்றரை வருடங்களுக்கு முன் பூச்சிகளுக்கு விசுறுவதற்காக மண்ணெண்ணெய் போத்தல் ஒன்று வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைக் கொண்டு ஒரு லைட்டரால் சிறுமி தீப்பிடித்துக் கொண்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் நேற்று பொரளைப் பொலிஸார் ஒரு பொலிஸ் அலுவலர் மற்றும் சாரதி ஒருவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.