மட்டக்களப்பில் அவசர சிகிச்சை பிரிவில் 86 மாணவர்கள் : பதற்றத்தில் மக்கள்
மட்டக்களப்பில் (Batticaloa) உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த 86 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலை, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் , கல்லடி வினாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமை
அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு, வாந்தி, தலைசுற்று, ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய்காவு வண்டிகளில் துரிதமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதுவரை 86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதுதொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி அருந்தியுள்ளதாகவும் அந்த உணவு ஒவ்வாமை இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





