தமிழர் பகுதியில் பெருந்தொகை பண மோசடி: சிக்கிய சந்தேக நபர்
மட்டக்களப்பில்(Batticaloa) ரூமேனியா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்றுதருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு முகவர் நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(03) இடம்பெற்றுள்ளது.
ஏப்.எஸ்.குனோபல் ரவல் என்ற பெயரில இயங்கிவந்த வெளிநாட்டு முகவர் நிலையத்தின் மூதூரைச் சேர்ந்த 29 வயதுடைய உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி
இது தொடர்பாக தெரியவருவதாவது, மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்துக்கு அருகாமையில் கல்முனை வீதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் இல்லத்தின் உரிமையாளர் முகநூல் ஊடாக ரூமேனியா, போலாந்து, சோபியா போன்ற நாடுகளுக்கும் ஜரோப்பிய நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு உள்ளதாக விளம்பரம் செய்துவந்துள்ளார்.
இதனையடுத்து, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பலர் நேரடியாக குறித்த முகவர் நிலையத்துக்கு சென்று விண்ணப்படிவங்களை நிரப்பி கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மற்றும் காவல்துறை நற்சான்று பத்திரங்கள் உட்பட ஆவணங்களுடன் 2023ஆம் ஆண்டு 12 பேர் தலா 16 இலச்சம் ரூபா வீதம் ஒருகோடியே 92 இலச்சம் ரூபா வழங்கியுள்ளனர்.
இருந்தபோதும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது நீண்டகாலமாக இழுத்தடித்து வந்த நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பணத்தை திருப்பிதருமாறு கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் பணத்தை வழங்காததையடுத்து அவருக்கு எதிராக சிலர் மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததுடன் கொழும்பிலுள்ள அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 12 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது, வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு குழுவினர் சம்பவதினமான இன்று(03) பகல் குறித்த வேலைவாய்பு முகவர் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அந்த முகவர் நிலையம் பதிவு செய்யப்படாமல் போலியாக இயங்கி வந்துள்ளதுடன் ரூமேனியா போலாந்து, சோபியா மற்றும் ஜரோப்ப நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக 74 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய 74 பையில்களை மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து முகவர் நிலையத்தில் காட்சிப்படுத்துவற்காக பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகளை கழற்றி எடுத்ததுடன் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
மேலும், இவரை விசாரணையின் பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |