வெளிநாட்டுப் படைகளுக்கு ஈரான் முக்கிய எச்சரிக்கை! அராக்சியின் அறிவிப்பு
வெளிநாட்டுப் படைகள் ஹோர்முஸ் நீரிணையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களின் எல்லைக்கு அருகில் உள்ள வெளிநாட்டுப் படைகள், அவர்களின் சொந்தத் தவறுகள், சாதாரண விபத்துகள் அல்லது குறுக்குத் தாக்குதல்களில் சிக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக எப்போதும் ஆபத்திலேயே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர் எச்சரிக்கை
தெஹ்ரான் எப்போதுமே ராஜதந்திர மொழியையே விரும்புகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவு அமைச்சர், தங்களின் துணிச்சலான வீரர்கள் உலகிற்குக் காட்டியது போல தங்களுக்கு மற்ற மொழிகளையும் பேசத் தெரியும் என்று எச்சரித்துள்ளார்.

Image Credit: Britannica
மேலும், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச நீர்ப்பரப்பாகக் கருதப்படவில்லை என்றும், அது ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் ஈரானின் வான்வெளி, நிலப்பரப்பு அல்லது கடல் எல்லைகளில் ஏற்படும் எந்தவொரு மீறலுக்கும் எதிராக ஈரானிய இராணுவம் தொடர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து
இந்த நீரிணை ஈரான் மற்றும் ஓமானின் கடல் எல்லைகளுக்குள் அமைந்திருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) கீழ் இது ஒரு சர்வதேச நீரிணையாகவே கருதப்படுகிறது.

இதன் மூலம் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கலங்களுக்கு இதன் வழியாகத் தடையின்றி பயணிக்கும் உரிமை உண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரானோ அல்லது அமெரிக்காவோ இந்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட மாநாட்டை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், தெஹ்ரான் இந்தத் தடையற்ற பயணப் பாதை விதியையும் முற்றாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்