உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்) தொடர்புடைய ஒரு குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுத் துறையின் சில பிரிவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.
அண்மையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார்.
சட்டபூர்வமான அரச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் படுகொலைகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலுக்கும் இந்தத் தொடர்பு பயன்படுத்தப்பட்டதாக திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மௌலானா கூறிய வாக்குமூலம்
மேலும், அப்போது சுமார் ஆறு மாத கால அவகாசத்தில் இருந்த தேர்தலுக்கு முன்பு, இந்தத் தகவலை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் விளக்கியுள்ளார்.

ஹன்சிர் ஆசாத் மௌலானா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, தற்போது விசாரணையில் உள்ள குழுவானது கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், பத்திரிகையாளர்கள் கீத் நோயர் மற்றும் உபாலி தென்னக்கூன் மீதான தாக்குதல், மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் கொலை ஆகியவை இவற்றில் அடங்கும்.
இருப்பினும், இவை நீதிமன்றத்தின் முன் உள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே, இன்னும் இவற்றின் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றில் தனது உண்மைகளை முன்வைத்துள்ளார்.
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்டோர் இராணுவ உளவுத்துறை மூலம் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
தகவல்களை மறைக்கும் செயல் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஒரு சந்தேக நபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சுரேஷ் சலே, ஆசாத் மௌலானாவின் குடும்பத்தினரை அஹுங்கல்லேவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தூதரகத்தில் ஒரு பதவி வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த்துள்ளார்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் அந்த ஹோட்டலின் பதிவேடுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி தற்போது காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், விசாரணையைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெறுவதாகவும் கூறி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், சலேவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் தாக்குதல் நடத்தவோ ஆரம்பத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டு இந்தத் தாக்குதல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது நடைபெறவிருந்த தேர்தல்களை இலக்குவைத்து , சலே அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற முக்கிய பிரமுகர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |