பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த பெண் கைது
பாரிய பணமோசடி செய்த குற்றத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பகா (Gampaha) மாகொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய குறித்த பெண் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு அதனை மீள வழங்காமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு சொந்தமான சொகுசு கார், பல ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மடிக்கனிணிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய பண மோசடிகள்
அந்தவகையில், தாம் வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறிய குறித்த சந்தேகநபரான பெண், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்க அவசரமாக பணம் தேவைப்படுவதாக கோரி குறித்த வர்த்தகரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், குறித்த பெண் தம்மை சந்திக்கவில்லை என வர்த்தகர் காவல்துறையினரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரான பெண் பல பாரிய பண மோசடிகள் தொடர்பில் முன்னர் குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை
இவருக்கு எதிராக கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றம், களுத்துறை (Kalutara) பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த பிரதான நீதவான் நீதிமன்றில் பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடமும் தன்னை நீதவான் என அடையாளப்படுத்தி 636,000 ரூபாய் பணம் பெற முயன்றதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, போலி கடவுச்சீட்டு தயாரித்தல், காசோலை வழங்குதல் போன்ற பல மோசடிகளில் சந்தேகநபரான பெண் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததுடன், முன்னாள் அதிபர் ஒருவரின் பதவிக் காலத்தில் அவருடன் தொடர்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டு பண மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரான பெண் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |