மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் : பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொழும்பில் வைத்து நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.
கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை - நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும், இளம்தாயின் மகளான 3 வயது சிறுமி வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது
இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதி காவல்துறைமா அதிபரின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், 34 வயதுடைய அவரது கணவரும், 22 வயதுடைய கணவனின் தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலயத்தில் காவல்துறையினர் கைது செய்துடன் இரு முச்சக்கர வண்டிகள், கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களை மீட்டனர்.
மயக்கமருந்துகள் மீட்பு
அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்கமருந்துகளை மீட்டதுடன் முச்சக்கர வண்டி சாரதியையும் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மயக்கமருந்து வழங்கிய மற்றும் குறித்த கும்பலை வழிநடத்திய பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (29) இரவு கொழும்பு வத்தளை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவரான சிவா என்றழைக்கப்படும் திவாகரன் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்