சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!
ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10, 2026) அதிகாலை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) ஒரு பேரல் 0.87 சதவீதம் உயர்ந்து 96.75 டொலராக வர்த்தகமானது.
அதேவேளை, அமெரிக்க கச்சா எண்ணெய் எதிர்கால விலையும் 1 சதவீதத்திற்கும் மேலான விலை அதிகரிப்பைக் கண்டுள்ளது.
எண்ணெய் போக்குவரத்து
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களை அனுமதிப்பதில் ஈரான் மெத்தனமாகச் செயல்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளதுடன், அங்கு செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முயற்சிக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் முந்தைய தாக்குதல்களால் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தித் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதன் தினசரி உற்பத்தி சுமார் 6,00,000 பேரல்களாகக் குறைந்துள்ளது.

அத்துடன், சவூதியின் கிழக்கு - மேற்கு குழாய்த்திட்டத்தின் விநியோகம் ஒரு நாளைக்கு 7,00,000 பேரல்களாகச் சரிந்துள்ளதாகச் சவூதி செய்தி நிறுவனம் (SPA) உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டிருந்தாலும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் இந்த அமைதி முயற்சியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன.
இத்தகைய பிராந்தியப் போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடைகள் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையைத் தொடர்ந்து ஏற்றத்தில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |