முல்லைத்தீவில் நள்ளிரவில் வீடு புகுந்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு!
முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் திருடிச்சென்றுள்ளார்.
கடந்த (16.09.2026) ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் மதிலேறி உள்நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணி வரை வீட்டினுள் நுழையப் பலமுறை முயற்சித்துள்ளமைக்கான சான்றுகள் வீட்டிலுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.
மேலதிக நடவடிக்கை
பின்னர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபாய் பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் திருடியுள்ளார்.
இதன்போது வீட்டினுள் நபர் ஒருவரின் நடமாட்டத்தை உணர்ந்த வீட்டார்கள் கூச்சலிடவே, திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து 119 என்ற காவல்துறை அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
சந்தேகநபரை 3 நாட்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதுடன், தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
`| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |