தமிழர் தரப்பை பகடைக்காயாக்க முயலும் கோட்டாபய - பேச்சை புறக்கணிக்கிறது ரெலோ
சர்வதேச அழுத்தங்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எம்மைப் பகடைக்காயாக ஆக்குகின்ற செயற்பாடே அரச தலைவரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு என ரெலோ தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள ரெலோ அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் எமது கட்சியின் தலைமைக்குழு மட்டக்களப்பில் கூடி சில தீர்மானங்களை எடுத்திருந்தது. குறிப்பாக அரசதலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அழைத்ததையொட்டி ஏற்கனவே நாங்கள் சம்பந்தன் ஐயாவிற்கு ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தோம். அது தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்திருந்தோம்.
எமது தீர்மானத்தின் போது நாங்கள் இரண்டு தலைவர்களைச் சிந்தித்தோம். ஒன்று எங்கள் கட்சியின் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் மற்றையது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆகியோரின் சிந்தனை இந்த நேரத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தோம்.
அந்த அடிப்படையிலே அவர்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்திருப்பார்கள். அந்த நிபந்தனை என்பது நல்லிணக்க அடிப்படையிலே சில விடயங்களை அரச தலைவர் செய்ய வேண்டும் என்று நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்.
அரச தலைவர் இன்றுவரைக்கும் போரை நடத்தி முடித்தவர் என்ற பெருமிதத்தோடும் இறுமாப்போடும் சிங்கள மக்களின் வாக்குகளால் வந்தவர் என்கின்ற இனத்துவேசத்தோடும், இனப்பிரச்சினை இந்த நாட்டிலே இல்லை, பெருளாதாரப் பிரச்சனை மாத்திரம் தான் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுக்கு அழைக்கின்றார்.
சம்பந்தன் ஐயா அவர்கள் முதலில் அரசதலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கலந்துரையாட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒன்பது மாதங்கள் கழித்து தற்போது நாடு படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கின்ற இந்த சூழலிலே வடக்கு கிழக்கிலே இந்த அரசாங்கம் காணிகளைச் சூறையாடுகின்றது, புத்தர் சிலைகளை வைக்கின்றது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விலைபேசுகின்றது. களவு,பாலியல் வன்புணர்வு செய்தவர்களை பொதுமன்னிப்பு என்ற ரீதியில் விடுதலை செய்கின்ற இந்த அரசு 20 வருடங்களுக்கு மேலாக சிறையிலே வாடுகின்ற அரசியற் கைதிகள் சம்மந்தமாக எந்தவொரு அக்கறையும் கொள்ளாத சூழலிலே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐநா தீர்மானம் சொல்லுகின்ற இந்த சூழலிலே, ஐநாவின் நெருக்கடி, அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நெருக்கடி போன்றவனவற்றிற்குள் இருந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலிலே, அது மாத்திரமல்லாமல் இந்தப் பேச்சுவார்த்தைக்கு நடுவில் செயற்படும் வெளிவிகார அமைச்சரின் செயலாளர் கூடச் சொல்லுகின்றார் இந்த நாட்டிலே இனப்பிரச்சனை இல்லை என்று. இதற்குப் பின்னும் நாங்கள் இந்த அரசதலைவரோடு பேச வேண்டுமா?
ஆகவே நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். அரசதலைவர் முதலில் இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
இறுதியாக அவர் நாடாளுமன்றத்திலே உரை நிகழ்த்திய போது கூட இனப்பிரச்சினை சம்மந்தமாக தொடாத காரணத்தால் அவருடைய தேனீர் விருந்திலே கலந்து கொள்ளவில்லை.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் சம்பந்தன் ஐயா மிகக் காட்டாக உங்கள் சகோதரரின் பேச்சு குப்பை என்று சொல்லுகின்ற அளவிற்கு அவரின் பேச்சு நாடாளுமன்றத்திலே அமைந்திருந்தது.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்பட்டிருக்கின்றது. இதன்போது இறுதியாகக் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திலே அங்கத்துவக் கட்சிகளாக இருக்கின்ற தமிழரசுக் கட்சியும் புளொட் கட்சியும் செல்வதாகத் தெரிவித்தார்கள். நாங்கள் எங்களின் தலைமைக்குழுவில் தீர்மானித்தே எங்கள் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தோம்.
எங்களின் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம். எங்களது பங்காளிக் கட்சிகள் அரச தலைவருடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வதை சற்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
நேற்றைய தினம் கூட யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயற்பாடு நடைபெற்றது. இவ்வாறாக இந்த அரசு இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே நாங்கள் இந்த அரசைக் காப்பாற்றுகின்ற செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது.
எனவே நாங்கள் எமது தலைமைத்துவக் குழுவில் தீர்மானித்துள்ளதன் பிரகாரம் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை அரச தலைவர் ஒத்துக் கொள்ள வேண்டும். காணாமல் போனவர்களுக்கு விலைபேசாமல் அவர்களை ஒப்படைத்தவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கப்பட வேண்டும். உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக காசு தருவதாகச் சொல்வது ஏற்புடையதல்ல.
எமது இருப்பைக் கேள்விக்குறியாக்கக் கூடிய விதத்தில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. நிலம் இருந்தால் தான் அந்த இனம் செறிந்து வாழ முடியும். இந்த அரசின் சிந்தனையின்படி ஒரு இனத்தின் நிலங்கைளை அபகரித்தால் அந்த இனத்தின் வாழ்வு கேள்விக்குறியாகும்.
அந்த வகையிலேயே மகாவலி, வனப் பாதுகாப்பு, பறவைகள் சரணாலயம், தொல்பொருள் திணைக்களம் என்ற திணைக்களங்கள் ஊடாக எமது பூர்வீகத்தை இல்லாதொழித்து இந்த நாட்டிலே வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை இனம் சார்பாக பிரதிநிதித்துவம் வர வேண்டும் என்ற திட்டத்தோடு செயற்படுகின்றார்கள்.
எமது நிலம் எமக்கு முக்கியம். இந்த நிலத்திற்காகவே பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்திலே மடிந்திருக்கின்றார்கள். அவர்களின் போராட்டம் மலினப்படுத்தப்பட்டுவிடக் கூடாது.
எனவே எமது நிலத்தைத் தக்க வைத்து அடுத்த சந்ததி வாழ வேண்டும் என்று நினைத்த பொதுமக்கள், போராளிகளின் சிந்தனையை நாங்கள் சுமந்து செல்ல வேண்டும். அந்த வகையிலே இந்த நிலத்தை அபகரிக்கும் நிலைமைகளை அரசதலைவர் உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான சமிக்ஞையைக் காட்ட வேண்டும்.
மத ரீதியாக புத்தர் சிலைகளை வைக்கின்ற முறைமையை நிறுத்த வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் ஆதி காலத்தில் தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்தார்களே தவிர சிங்களவர்கள் அங்கு வாழவில்லை. பௌத்த மதம் என்பது சிங்களவர்களுக்கு உரித்தான மதம் அல்ல. அது பொதுவானது.
தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி என்று வடக்கு கிழக்கு பிரதேசத்தில் எங்கள் மக்களின் வரலாற்று நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இடங்களிலே சிங்கள ஆதிக்கத்தைச் செலுத்தி இந்த வரலாற்று இடங்களெல்லாம் சிங்கள தேசத்திற்குச் சொந்தமானது என்று சொல்கின்ற வகையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை உனடியாக நிறுத்த வேண்டும் என்று தான் எங்கள் கோரிக்கை இருக்கின்றது.
எங்களது பிரச்சனை சம்மந்தமாக ஐ நா சபையூடாக இந்தியாவும், சர்வதேச நாடுகளும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலிலே நாங்கள் இந்த அரசதலைவரின் அழைப்பை ஏற்றுப் போனோமாக இருந்தால் தற்போது வெளிவிவகார அமைச்சர் சொல்வது போன்று ஐநா உள்நாட்டு விடயங்களைக் கையாளுகின்றது அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று சொல்வதற்கும் மேலாக எங்களது சந்திப்பை வைத்து நாங்கள் தமிழ்த் தரப்போடு பேசுகின்றோம் எனவே எங்கள் பிரச்சனைகளை நாங்கள் அவர்களோடு பேசித் தீர்ப்போம் என்று தங்களைக் காப்பாற்றுவதற்கு எங்களை ஒரு பகடைக்காயாக ஆக்குகின்ற ஒரு நிலைப்பாட்டினை இந்த அரசாங்கமும், அரச தலைவரும் வெளிப்படையாகச் சொல்லப் போகின்றார்கள்.
எனவே எங்களுக்காகக் குரல் கொடுக்கின்ற நாடுகளினுடைய ஒட்டுமொத்தமான அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற வாய்ப்பினை அரசதலைவர் பெறப்போகின்றார். அவர் இனப்பிரச்சனை தொடர்பில் பேசப் போகின்றாரா? அல்லது பொருளாதார ரீதியில் பேசப்போகின்றாரா? எதை வைத்துக் கொண்டு அவர் பேச்சுக்கு அழைக்கின்றார் என்ற விடயம் அரசதலைவரின் செயலக நிகழ்ச்சி நிரலில் கூடச் சொல்லப்படவில்லை.
இவர் அரசியற் தீர்வுக்காகத்தான் அழைக்கின்றார் என்று நாங்கள் ஒரு கற்பனையிலே இருக்கின்றோம். இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை கூட இல்லாமல் இந்த அரசாங்கம் இருக்கின்றது. அரசியல் சாசன திருத்தம் அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும் சாதகமாக எழுதப்பட்டாலும் கூட நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் தான் அதனை வெல்ல வைக்க முடியும்.
ஆனால் தற்போது இந்த அரசாங்கத்திற்கு அவ்வாறான நிலைமை இல்லை. அவர்கள் சார்ந்த விடயத்தைக் கொண்டு வந்தால் கூட வெல்ல முடியாத நிலையிலே இருக்கும் போது அரசியல் திருத்தத்தில் இனப்பிரச்சனையைக் கொண்டு வருகின்ற வாய்ப்பு எவ்வாறு உருவாகும்? என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்க விரும்புகின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் நாங்கள் வைத்த தீர்மானங்களுக்கு அரசதலைவரால் நல்ல சமிக்ஞை காட்டுகின்ற போதே பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பேச்சுவார்தைக்குச் செல்லக் கூடாது என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. இந்தச் சூழலிலே நாங்கள் சில விடயங்களைச் சாதிக்க வேண்டும்.
எமது மக்களின் பிரச்சனைகளில் முக்கிய ஓரிரு விடயங்களையாவது கோரிக்கையாக முன்வைத்துப் பெறவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.
எனவே எமது கட்சி தீர்க்கமான முடிவெடுத்திருக்கின்றது. அரசதலைவரின் சமிக்ஞை கிடைக்காதவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.
