இரவோடு இரவாக சுற்றிவளைக்கப்பட்ட கோட்டாபயவின் இல்லம் - அரச தலைவரின் வீட்டுக்குச் சென்ற மகிந்த
மிரிஹானவிலுள்ள சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் திடீரென விஜயம் செய்துள்ளார்.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் கோட்டாபயவின் இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரிஹானவிலுள்ள கோட்டாபயவின் இல்லத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பலர் போராட்டத்தில் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், காலை ஐந்து மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டிருந்தது.
மேலும், குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுக்கள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியிருந்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரச தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.