சிறிலங்கா அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரை! இன்றும் நாளையும் விவாதம்
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகி நாளை மாலை வரையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் இன்று பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை மீதமுள்ள விவாதமானது நாளை காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது.
அரசியலமைப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய சிறிலங்கா அரச தலைவர் நேற்று அரசின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
சிறிலங்கா அரச தலைவரின் உரை தொடர்பில் பல்வேறுபட்ட எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. சிறிலங்கா அரச தலைவரின் உரையினை வரவேற்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதான எதிர் தரப்புக்களான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.