கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு! மின்சார தடை தொடர்பில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் அரச தலைவரிடம் அறிவித்துள்ளனர்.
மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது பணிப்புரை விடுத்தார்.
தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல், மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் அரச தலைவரிடம் அறிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் கோட்டாபயவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றையதினம் ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
