நாம் தலைவர்கள்! ஒருபோதும் தயங்கக்கூடாது - ஜனாதிபதி கோட்டாபய சூளுரை
மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ வேண்டும். அத்தோடு, மக்கள் தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பல்வேறு பேண்தகு வழிகளில் அடையக் கூடியதாகவும் அவை இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று (04) பிற்பகல் இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 48ஆவது கூட்டத்தொடரின் விவசாய சூழலியல் நிகழ்வில் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தலைவர்கள் என்ற வகையில், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பது எமது பொறுப்பாகும்.
முடிவுகளை எடுக்க நாம் தயங்கினால், அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்தில் மட்டுமே சுருங்கியிருக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.