யாழ். தையிட்டி காணி விடுவிப்பு : வடக்கு மக்களை ஏமாற்ற முயல்கிறதா அநுர அரசு
யாழ். (Jaffna) தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் விகாரையைச் சூழ இருக்கின்ற காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் இந்தக் காணி விடுவிப்பு இடம்பெறும் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ள காணிகளைத் தவிர்த்து, பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாத காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
பாதுகாப்புப் படை
இதேவேளை, கடந்த 26ஆம் திகதி கிளிநெச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி அநுர (Anura Kumara Dissanayake) மக்கள் காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தார்.
போரின்போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதன்போது உறுதியளித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் இந்த காணி விடுவிப்பு விடயம் சமூகத்தில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதன் மூலம் தையிட்டி விகாரை விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் கிளம்பியுள்ள எதிர்ப்பு அலைகளை சற்று தணிக்கச் செய்யலாம் என்றும், தேர்தலில் வடக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறலாம் என்றும் அரசு தரப்புக் கருதுவதாகத் தெரிகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
