அரசாங்கத்தின் வீழ்ச்சியே முட்டைத் தாக்கதலுக்கு காரணம் - எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு
அண்மையில் மக்கள் விடுதலை முன்னணி மீது முட்டை தாக்குதல்கள் மேற்கொண்டமையும் மற்றும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரன் மீதான முட்டைத் தாக்குதல் மேற்கொண்டமை போன்ற சம்பவங்கள் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் அளவையே காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மதவாச்சி அகுநொச்சி மகா வித்தியாலயத்திற்கு பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டம் ஊடாக எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (850,000) மதிப்பிலான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொள்கையில் இருந்து விலகி, வேலைத்திட்டங்கள் செயலிழந்து, விழுமிய மதிப்புகளால் வீழ்ச்சி கண்ட நாட்டால் முன்னேற முடியாது. முட்டை தாக்குதல் போன்ற கேவலமான செயல்கள் சீரழிந்த அரசாங்கத்தின் யதார்த்தத்தையே புலப்படுத்துகின்றது.
மேலும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் முகமாக தகவல் தொழில்நுட்பப் புரட்சியை முன்கொண்டு செல்வது அதன் ஒரு தொடக்கங்களில் ஒன்றாகும்.
அதிகாரம் இல்லாமலயே, தான் குறித்த புரட்சியை நடத்துகின்றோம். பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தகவல் தொழில் நுட்ப புரட்சி, டிஜிட்டல் பொருளாதாரப் புரட்சி என்பவற்றைக் கூறலாம். இந்த புரட்சி உலகின் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அமெரிக்க பில்லியன் டொலர் வியாபாரம் என அடையாளப்படுத்தப்படும் கங்வேனன் வியாபாரம் உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றை உருவாக்கும் போது நம் நாட்டிலும் அந்நியச் செலாவணி பிரச்சினையோ பற்றாக்குறையோ ஏற்படாது.
பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து சிலர் கபடத்தனமாக பேசுகின்றனர். அவ்வாறானவற்றை கருத்திற் கொள்வதில்லை. இந்நாட்டின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








