இந்த அரசு ஆளுநரை காணி பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியுள்ளது? - சிறீதரன்
வடக்கிற்கு வந்துள்ள புதிய ஆளுநரான ஜீவன் தியாகராஜா, 'காணி அளப்பதற்கு யாரும் இடையூறாக இருந்தால் அது அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி பிடித்து உள்ளுக்கு தள்ளுவேன்' என கூறுகின்றார்.
இந்த அரசு ஆளுநரை காணி பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியுள்ளது? என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் (S.Shritharan) கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கிற்கு ஆளுநராக வந்ததது, நல்லிணக்கத்தை உருவாக்கி அபிவிருத்தியை ஏற்படுத்தவா அல்லது தமிழ் மக்களின் காணிகளை பறித்து இராணுவத்துக்கும் கடற்படைக்கும் கொடுக்கவா நியமிக்கப்பட்டுள்ளார்?
எனவே, இவரை வடக்கிற்கான ஆளுநராக நியமித்தவர்கள் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களை குறிவைத்ததாகவே பெருமளவு நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் பல கட்டிடங்கள் இலங்கையின் முப்படைகளினால் வடக்கில் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய தனியார் காணிகளில் கட்டுவதற்காக செலவிடப்படவுள்ளன.
கடந்த வாரம் கூட மாதகல், பருத்தித்துறை, வலிகாமம் வடக்கு போன்ற பிரதேசங்களில் மக்களின் காணிகளை அளக்கும் நடவடிக்கைகள் படையினர் நில அளவைத்திணைக்களம் மூலம் முன்னெடுக்கின்றனர். இவ்வாறான நிலங்களில் பாரிய கட்டிடங்கள், விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
இவை எல்லாம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தான் நடக்கின்றனவா?
வடக்கின் கடற்கரையோரங்களில் கரையொதுங்கியுள்ள 6 சடலங்களும் யாருடையது என்பதனை காவல்துறையினரால் இதுவரையில் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை?
சடலங்கள் கரையொதுங்குவதற்கு காரணம் என்ன? இவ்வாறு சடலங்கள் கரையொதுங்குவதற்கு பொறுப்புக்கூறுவது யார்? ஏன் இவ்வளவு காலம் எடுக்கின்றது?
இலங்கை காவல்துறையினர் கெட்டிக்காரர்கள், பத்திரிக்கையாளர்களை சுடுவார்கள், மக்களை சுடுவார்கள், ஆனால் அவர்களுக்கு ஏன் இதனை மட்டும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது? என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.