அதானி குழுமம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
மன்னாரில் அதானி கிரீன் எனர்ஜியுடன் இணைந்து செயல்படுத்தி வந்த காற்றாலை மின்சார திட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால், அந்த நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியாயமான விலையில் எரிசக்தி
கடந்த வாரம், இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னாரில் அதன் காற்றாலை மின்சார திட்டத்திலிருந்து விலக முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், இது குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ, உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ குடிமக்கள் நியாயமான விலையில் எரிசக்தியைப் பெறுவதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
முதலீட்டு வாய்ப்புகள்
அத்தோடு, அதானியின் நிறுவனத்தை விடக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சில விமர்சகர்கள் கூறுவதாகவும், ஆனால் ஒரு முதலீட்டாளர் வெளியேறினாலும், இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து நியாயமான விலையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
