சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்கு வெளியீடு! அம்பலப்படுத்தப்படும் அரசின் திட்டம்
தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு பங்கு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது சில நிறுவனங்கள் கையகப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(14) கருத்து தெரிவித்த அவர், ரூ. 2.5 பில்லியன் மதிப்பிலான பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.100 என்ற விலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்கள் ஆர்வம்
இந்த திட்டத்தின் படி, தேசிய விமான சேவையை நிலைப்படுத்தும் நோக்கில், அரசுத் திறைசேரி பங்குகளை வாங்கும் என்றும் அதன் மூலம், கடன் சுமையில் சிக்கியுள்ள நிறுவனத்தின் நிலைமையை சீர்படுத்தி, பின்னர் சில தனியார் நிறுவனங்களுக்கு அதை வாங்கும் வாய்ப்பு உருவாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, சிறிங்கன் கேட்டரிங் மற்றும் தரைத்தள சேவைகள் ஆகிய பிரிவுகளில் சில நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றும் தயாசிறி தெரிவித்துள்ளார்.
“தேசிய விமான சேவை தற்போது கடன் சுமையில் மூழ்கியிருப்பதால் யாருக்கும் அதில் ஆர்வம் இல்லை. அரசே பங்குகளை வாங்கி கடன்களை தீர்த்துவிட்டால், பின்னர் சில நிறுவனங்கள் உள்ளே வருவதற்கான சூழல் உருவாகும்,” என்று தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |