பல பாடசாலைகளை மூட முயலும் அரசு - அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்
நாட்டில் பல பாடசாலைகளை மூடுவதற்கும் இலவச கல்வியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) பிரதமரிடம் இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பியே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் எந்த பாடசாலையையும் மூடப்போவதில்லை என பிரதமர் தெரிவிக்கின்ற போதும், நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மட்டங்களில் இருந்து எங்களுக்கு அறியக் கிடைக்கிறது.
ஆசியரிகளின் கோரிக்கை
இது தொடர்பில் எங்களுக்கு முறையான பதில் ஒன்று வேண்டும். அதேபோன்று ஆசியரிகளின் கோரிக்கையான எஞ்சிய மூன்றில் இரண்டு கொடுப்பனவை வழங்குவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அந்த வாக்குறுதி தற்போது மறக்கப்பட்டுள்ளது .அதேபோன்று பாடசாலை கட்டமைப்பில் பெற்றோர்களிடம் பணம் சேகரித்து, பாடசாலைகளுக்கு தேவையான தொலைக்காட்சி, ஸ்மாட் பலகை போன்ற உபகரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலவச கல்வியை பாதுகாத்து, பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் மயமாக்க கொள்கை
அதேபோன்று அரசாங்கம் கல்வி நடவடிக்கையை டிஜிட்டல் மயமாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருக்கிறது.

ஆனால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்து 5ஆம் தரம் வரை தகவல் தொழிநுட்ப பாடவிதானம் கற்பிக்க ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் எமது பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப பாடம் 6ஆம் வகுப்பிலே ஆரம்பிக்கப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல் அரசாங்கத்தின் கொள்கை என்றால், முதலாம் தரத்தில் இருந்து தகவல் தொழிநுட்ப கல்வியை ஆரம்பிக்க வேண்டும். அது ஆங்கில மொழியிலே மேற்கொள்ள வேண்டும். அந்த விடயங்களும் செயற்படுத்தப்படவில்லை என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |