இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள்! மத்திய அரசுக்கு அநுர அரசாங்கத்தின் செய்தி
உள்நாட்டுப் போரின் போது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசிக்கும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியதனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அந்தச் செய்தி அறிக்கையின்படி, அகதிகளை அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அமைச்சர் பிமல் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் தலையீடு
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய அரசின் தலையீட்டைக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து அகதிகளாகத் திரும்புவோர் குறித்த அரசின் தற்போதைய நிலைப்பாடு பற்றிக் கேட்கப்பட்டபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் கடிதத்தின்படி, தமிழகம் முழுவதும் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சுமார் 89,000 பேர் வசிக்கின்றனர், அவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் அங்கேயே பிறந்தவர்கள்.
2009-ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், ஜனவரி 2009 முதல் ஜூன் 2025 வரையிலான 16 ஆண்டுகளில், 18,542 பேர் தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் பிமல், திரும்ப விரும்பும் அவர்களை வரவேற்க அரசாங்கம் நிச்சயமாகத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இருப்பினும், “அவர்களில் சிலர், இந்தியாவில் பிறந்தவர்கள், அல்லது பல தசாப்தங்களாக அங்கு வாழ்ந்து, படித்து, பணியாற்றியவர்கள், அல்லது ஒரு இந்தியரைத் திருமணம் செய்தவர்கள், இந்தியக் குடியுரிமையைப் பெற முடிவு செய்தால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் மறுக்க முடியாது. அங்கு குடியுரிமை பெறுவது அவர்களின் யதார்த்தம் மற்றும் உரிமை,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரின் வேண்டுகோள்
மேலும், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அவர் விடுத்த செய்தியில், “இந்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தேர்தல்களைச் சுற்றியுள்ள அரசியல் பிரச்சாரத்திற்கு அகதிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்.

அவர்கள் ஏற்கனவே பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளனர்; அவர்களின் கோரிக்கையை நாம் கவனத்துடனும் உணர்வுடனும் கையாள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தில் ஒரு முக்கிய குரலாக விளங்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2007-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, முகாம்களில் வசிக்கும் 28,500 நபர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இயற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, மே 2025-ல், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கை தீவை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவிலிருந்து திரும்பிய 75 வயது இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டதை யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியபோது, இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் ரத்நாயக்க கூறியிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |