பத்து லீற்றர் டீசலுக்கு ரூ.1000 நிவாரணம்! ஜனாதிபதி அநுர அறிவிப்பு
ஒவ்வொரு பத்து லீற்றர் டீசலுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற ஒரு மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த நிவாரணம் நேற்று (மே 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 492 ரூபாயாக இருக்கும் போதிலும், மக்களுக்கு அது 392 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் அதன் விலை இதைவிடவும் பல மடங்கு அதிகமாகக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்றொழில் துறைக்கான மானியம்
மேலும், கடற்றொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் படகுகளுக்கான புதிய எரிபொருள் மானிய விபரங்களையும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அதன்படி, பல்நாள் விசைப்படகுகளுக்கு 150,000 ரூபாய் மானியமும், 25 நாட்கள் கடலில் பயணிக்கும் படகுகளுக்கு 32,250 ரூபாய் எரிபொருள் மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசாங்க திறைசேரியில் இருக்கும் பணம் ஆட்சியாளர்களின் சொந்தப் பணம் என்றே கருதப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த திறைசேரிப் பணம் என்னுடைய தனிப்பட்ட சொத்து அல்ல என்றும், அது இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமான மக்கள் பணம் என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |