ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடிபணிய முடியாது!
ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குமாயின் அதனால் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவிற்கு பாதிப்பு ஏற்படாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கவலை வெளியிட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீலங்கா பொருளாதாரத்திற்குப் பலமாக அமைந்துள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஊடகமொன்றுக்கு ஸ்ரீல்ஙகாவின் நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து வெளியிட்டிகையில்,
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடும் நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது எனத் தெரிவித்துள்ளார். பொருளாதார காரணிகளை கொண்டு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
ஏற்கனவே ராஜபக்ச அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த வரிச்சலுகை நீக்கப்பட்டிருந்த போதிலும் மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சியின் காலத்தில் மீண்டும் ஜி. எஸ். பி வரிச்சலுகை வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுகிகள் அக்காலக்கட்டத்தில் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன.
எனினும் தற்போது அந்த வரிச்சலுகை மீண்டும் இரத்து செய்யப்படும் அபாயம் ஏற்படுவதற்கான பின்னணி உருவாகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் இறையாண்மை பல சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் கப்ரால் தெரிவித்துள்ளார்.