ஹமாஸின் புதிய இராணுவத்தளபதி உட்பட குடும்பத்தையே சாய்த்தது இஸ்ரேல்
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய இராணுவத் தளபதியான முகமது ஓடே கொல்லப்பட்டாா். முந்தைய தளபதி கொல்லப்பட்ட 2 வாரங்களுக்குள்ளாக, முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
காஸா நகரின் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முகமது ஓடே மட்டுமின்றி அவரின் மனைவி, மகன், மகள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.
முகமது ஓடே குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு
முகமது ஓடே குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு காஸா நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனா்.

ஹமாஸ் அமைப்பின் பச்சைக் கொடி போா்த்தப்பட்ட உடல்கள், பள்ளிவாசலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, மக்கள் கோஷங்களை எழுப்பியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் துக்கத்தை வெளிப்படுத்தினா்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் மூளை
கடந்த 2023, ஒக். 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் மூளையாக செயல்பட்டவா்களில் முகமது ஓடேவும் ஒருவா் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா்.

மேலும், அவரின் எக்ஸ் பதிவில், ‘ஒக். 7 தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் ஒழிக்கும் எங்களின் உறுதிமொழியை நிறைவேற்றுவோம். அவா்கள் அனைவரும் எங்கு தப்ப முற்பட்டாலும் கொல்லப்படுவா்’ எனக் குறிப்பிட்டாா்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |