கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஹட்டன் செல்ல மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!
கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
இன்றைய தினம் (24-08-2026) கொழும்பில் இருந்து ஹட்டன் செல்வதற்காக 300 இற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக அடுத்தடுத்த பேருந்துகள் எதுவும் இயக்கப்படாமல் பயணிகள் நீண்ட வரிசையில் தவித்து வருகின்றனர்.
பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நிலைமையைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடும் நெரிசல்
இன்றைய தினம் மட்டுமன்றி, வழக்கமாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் வேளைகளில் அடுத்தடுத்து பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து, கடும் நெரிசலுக்கு மத்தியிலேயே பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் மட்டுமன்றி, ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திலும் கொழும்பு நோக்கி வருவதற்கான பேருந்து சேவைகள் இதேபோன்று போதியளவில் வழங்கப்படுவதில்லை.
இலங்கை அரசாங்க போக்குவரத்து துறைக்கு அதிக வருமானத்தை ஹட்டன் டிப்போ பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கவனிப்பாறற்ற நிலைமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் மலையகத்திற்குப் பயணிக்கும் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் இந்த சிரமங்களைக் கருத்திற்கொண்டு, கொழும்பு - ஹட்டன் இரு மார்க்கங்களிலும் உச்ச நேரங்களில் கூடுதல் பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8