பொது மக்களுக்கு சுகாதார தரப்பினர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். எனினும் ஜூன் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னர் தொற்றுபரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது நாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமையைக் கவனத்தில் கொள்ளாது மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முண்டியடிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மீண்டுமொரு அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் , மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.