இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு
நாட்டில் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் (14) பணிப்புறக்கணிப்பு தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று (13) காலை 6.30 மணியளவில் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
முப்படையினரின் ஆதரவு
இதன் காரணமாக பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் தடைபட்டுள்ளதுடன், முப்படையினரின் ஆதரவுடன் வைத்தியசாலை நடவடிக்கைகளை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காத காரணத்தினால் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஏறக்குறைய ஒரு இலட்சம் சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், 72 தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், நாளை (15) வேலை நிறுத்தம் நடைபெறுமா இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிவிசேட வர்த்தமானி
இந்நிலையில், தமது தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் இன்று கொழும்புக்கு அழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி. மெடிவத்த தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிபரின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மருத்துவமனைகள், மருத்துவ விடுதிகள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்