வழக்கு விசாரணை முடிவடையும் வரை நாட்டில் இருந்து வெளியேறப் போவதில்லை! மகிந்தவும்- பசிலும் உறுதி
வழக்கு விசாரணை
தமக்கெதிரான வழக்கு விசாரணை முடிவடையும் வரை நாட்டில் இருந்து வெளியேறப் போவதில்லை என மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் உறுதியளித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார பேரிடர் காரணமாக அரசையும் அரசாங்கத்தையும் பதவி விலக கோரி இடம்பெற்ற பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி தலைமறைவாகியிருந்தார்.
இதனை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் மாலைதீவுக்கு பயணப்பட்டு பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். இந்நிலையில் மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் இன்னமும் சிறிலங்காவில் தான் இருக்கின்றனர் என்றும் அவர்களுக்கு எதிராகா வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறும் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
5 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணை
இந்த நிலையில் தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
இதனிடையே ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை உயர் நீதிமன்றில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.