மணற்காடு சவுக்கங்காட்டில் தொடரும் தீ : உலங்குவானூர்தி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை!
யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது.
தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேவையான நடவடிக்கைகள்
தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினதும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
