யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் - தொல்லியல் திணைக்களத்தை எச்சரிக்கும் பார்த்திபன்
ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினை பாதுகாத்து அதை மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான வரதராஜன் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மந்திரிமனையானது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அப்போராட்டத்தில் கலந்து கொண்ட போதே முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான வரதராஜன் பார்த்திபன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கின்றது
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மந்திரிமனை சிதைவுற்று கிடப்பது போன்று ஒரு பௌத்த விகாரை இருக்குமாக இருந்தால் அதைக் கைவிடுவதற்கு தொல்லியல் திணைக்களமோ அல்லது இந்த அரசாங்கமோ ஒருபோதும் தயாரில்லை.
யாழ்ப்பாணம் கோட்டையைச் சூழ கற்களை அடுக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற தொல்லியல் திணைக்களம் மந்திரி மனை விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கின்றது என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மந்திரிமனை தமிழர்களின் சொத்து எமது மூதாதையர் எமக்களித்த வரலாற்று ஆவணம் அது புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை என்றால் யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் என வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
