விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையான நேர அட்டவணையின்படி பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக, ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்துகள், நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட தொடருந்து சேவைகள்
புத்தாண்டு காலத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட தொடருந்து சேவைகள், பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இன்று நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால், நாளை 16 ஆம் திகதி முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |